அப்புறம் காவல்துறை எப்படி சும்மா இருக்கும்? என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டான தேவ் என்பவர் கையில், வீராவைப் போட்டுத் தள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. வீராவை குறி வைக்கும் போலீஸ் கையில் சிக்குவது அவர் தங்கை வெண்ணிலா. காவல்நிலையத்தில் சில காவலர்கள் அவளை சின்னாபின்னமாக்கிவிட, தற்கொலை செய்து கொள்கிறாள் வெண்ணிலா. அதற்கு பழி தீர்க்கும் விதமாக தேவ் மனைவி ராகினியை கடத்துகிறார் வீரா. மனைவியை மீட்பதற்காக வீராவைத் தேடிப் போகிறார் தேவ். கடைசியில் மனைவியை மீட்டாரா இல்லையா என்பது கதை.
வீரா என்கிற வீரய்யாவாக விக்ரம். விக்ரமின் நடிப்பாற்றலுக்கு தீனி போடுகிற மாதிரியான கேரக்டர். பழங்குடி மக்களின் தலைவனாக வரும் விக்ரம்க்கு ஆன்டி ஹீரோ கேரக்டர் என்றாலும் நல்ல வேளையாக அவரை ஆன்டி ஹீரோவாக மிகைப்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். விக்ரம் பேசும் ‘அடிப்படை உரிமைகளுக்காக போராடுகிறோம்... மேல்தட்டு மக்கள்... கீழ்த்தட்டு மக்கள்...’ எனும் வசனங்கள் பழங்குடி மக்களையும் நக்சலைட்டுகளையும் நினைவுபடுத்திப் போகின்றன. தேவ் ஆக ப்ரித்விராஜ். சில காட்சிகளில் மௌனமாகவே இருக்கும் இவர் கண்களில், தன் மனைவியை கடத்திய வீராவைக் கொல்ல வேண்டும் என்று புறப்பட்டதும் கோபமும் குரூரமும் குடிகொண்டு விடுகிறது. ராகினியாக ஐஸ்வர்யா ராய். சொந்த குரலில் பேசியிருக்கிறார். பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். இவரது எக்ஸ்பிரசன்ஸ்களை வெளிப்படுத்துவதற்கு ஏற்றமாதிரி ஏகப்பட்ட காட்சிகள். பாரஸ்டராக வரும் கார்த்திக், குரங்கு சேட்டை பண்ணுவதில் ஆரம்பித்து வீராவுக்கும் அதிரடிப்படையினருக்கும் சமாதனம் பேசுவது வரை வந்து போகிறார். வீராவின் அண்ணனாக பிரபு. நம் மனதில் அழுத்தமாக ஒட்டிக் கொள்ளும்படியான கதாபாத்திரம்தான (வெண்ணிலா) ப்ரியாமணி. ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார் நித்யானந்தா புகழ் ரஞ்சிதா. அரவாணி வேடத்தில் வையாபுரியும் நடித்திருக்கிறார்.
படத்தின் உண்மையான ஹீரோ மணிரத்னம்தான். படம் முழுக்க அவருடைய உழைப்பும் மெனக்கெடலும் ப்ரேம் பை ப்ரேம் தெரிகிறது. பார்த்து பார்த்து காட்சிகளை உருவாக்கியிருக்கிறார். அதற்காக ஒட்டு மொத்த டீமும் நன்றாகவே உழைத்திருக்கிறது. அருவி, மலை சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகு. இயற்கையை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். காடுகளும் மலைகளும் அருவியும் மட்டுமே படம் முழுக்க ஆக்ரமித்திருப்பதால் ஏதோ பழங்குடி மக்களுடன் வாழ்கின்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன், வி. மணிகண்டன். மர பாலத்தில் நடக்கும் சண்டைக்காட்சிகள், ஐஸ்வர்யாராய் மலையில் இருந்து குதிக்கும் காட்சிகள் என பிரமிக்க வைக்கின்ற காட்சிகளுக்கு பஞ்சமில்லை. வசனம் சுஹாசினி மணிரத்னம். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவராக விக்ரம் பேசும் வசனங்களுக்கு மட்டுமின்றி கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் பேசும் வசனங்களுக்காக சபாஷ் போடலாம். இசை ஏ.ஆர். ரஹ்மான். ‘உசுரே போகுதே’ கேட்கவும் ரசிக்கவும் வைக்கிறது. காட்சிகளோடு இணைந்து பின்னணி இசையும் பேசுகிறது.
எல்லாவற்றுக்கும் சேர்த்து இயக்குநர் மணிரத்னத்திற்கு தான் பெரிய சபாஷ் போட வேண்டும். இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் எல்லோருமே திரைத்துறையின் பெரிய தலைகள். அவர்களை எல்லாம் வைத்துக் கொண்டு இப்படி ஒரு படத்தை இயக்குவது தயாரிப்பது என்பதே சவாலான விஷயம்தான். இயக்குநர் மணிரத்னம் அதில் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். |